-றியாஸ் ஆதம் : For Madawala News
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகள் குறித்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளத்தினூடாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்படாமல் புறக்கனிக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்புக்கள் கிடைப்பதில்லை இதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்ற போது அந்தந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு என்னைப்போன்ற ஏனைய ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களை அழைக்க வேண்டாமென முதலமைச்சர் உத்தரவிடுவதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான முதலமைச்சரின் செயற்பாடுகளை தான் வன்மையாகக் கன்டிக்கின்றேன்.
குறிப்பாக நான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த போது ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி அந்த வைத்தியசாலைக்கு மகப்பேற்று விடுதிக் கட்டடமொன்றினை நிர்மாணிப்பதற்காக சுமார் ஒன்பது மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தேன் தற்போது அந்த நிதியின் ஊடாக விடுதிக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இத்தருவாயில் அவ்வைத்தியசாலைக்கு அண்மையில் விஜயம் செய்த முதலமைச்சர் அவ்விடுதிக் கட்டடத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாகாணசபை உறுப்பினரான என்னை அந்நிகழ்விற்கு அழைக்கக்கூடாது எனவும் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
அதேபோன்றுதான் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தினால் அண்மையில் நடாத்;தப்பட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திற்கும் மக்கள் பிரதிநிதியான எனக்கு அழைப்பு விடுக்க வேண்டாமெனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
குறிப்பாக ஏறாவூர் வைத்தியசாலையினை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்வதிலும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தினை உருவாக்கி அதனுடைய பணிமனையை ஏறாவூறுக்கு கொண்டுவந்து பல்வேறு பணிகளைச் செய்த பெருமையும் என்னையே சாரும் இவ்வாறு ஏறாவூர் மண்ணில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டவனும் நானே.
இவ்வாறு பல பணிகளை செய்த என்னால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிவுற்ற அபிவிருத்திப் பணிகளை திறந்து வைப்பதற்கு ஆர்வம் காட்டும் முதலமைச்சர் எனக்கு அழைப்பு விடுக்கக்கூடாது எனக்கூறுவது அவரின் அரசியல் வங்குரோத்து நிலைமையினையே வெளிக்காட்டுகிறது தன்னுடைய ஆளுமையினால் எந்தவொரு அபிவிருத்திப்பணிகளையும் முன்னெடுக்க முடியாமல் தத்தளிக்கும் முதலமைச்சர் கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை திறந்து வைத்து தன்னால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் போல் சித்தரிக்க முற்படுவது அவரின் இயலாமையினை வெளிக்காட்டுகின்றது இவ்வாறான கோமாளி அரசியலை நான் ஒருபோதும் செய்யப்போவதில்லை இவர்களின் இவ்வாறான மாயைகளை மக்கள் நன்கு விளங்கி வைத்துள்ளனர். ஆகவே இனி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முடியாது.
கடந்த காலங்களில் இந்த முதலமைச்சர் மாகாண விவசாய மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தபோது இருநூறுக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து பெரும் மாநாடுகளை எல்லாம் நடாத்தி கிழக்கில் வெளிநாட்டு முதலீட்டாளர்களினூடாக கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்யப்போவதாக சூழுரைத்தார். இறுதியில் நடந்தது என்ன ஒன்றுமே இல்லை அதே போன்றுதான் சுற்றுலாதுறையை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறி இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்போவதாகவும் கூறினார் இறுதியில் ஒன்றுமே நடைபெறவில்லை அந்த அமைச்சினுடைய பணங்களே வீனாக்கப்பட்டது.
அதேபோன்றுதான் தனது இயலாமையினை மூடிமறைப்பதற்காக தன்னைப்போன்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் முயற்ச்சியால் செய்யப்பட்ட அபிவிருத்தி பணிகளை அம்மாகாண சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் முதலமைச்சர் திறந்துவைத்து இப்பிராந்தியத்தில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியையும், இக்கட்சிக்காக வாக்களித்த மக்களையும், இந்த நாட்டிலே நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு பாடுபட்ட எங்களையும் ஓரங்கட்ட முற்படுகின்றார். இதுதொடர்பில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம் பௌசி அவர்களினூடாக ஜனாதிபதி அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment